சனி, 5 பிப்ரவரி, 2011

பாரதியை பார்க்கப் போயிருந்தேன்-2



பாரதியார் பரலி சு நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம்.
புதுச்சேரி 
19 -12 -1915

எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையை பராசக்தி நன்கு காத்திடுக.

தம்பி - மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள் நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே பல்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமேன்றே கருதுகிறேன்.

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியோருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை.

ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷையின் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்துகொள்ள முடியுமானால் - தமிழ்நாட்டிற்கு எத்தனை நன்மை உண்டாகும்! தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் கூடிக்கொண்டே இருக்கவேண்டும்.

தம்பி, நான் ஏது செய்வேனடா! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியார் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பதில் எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மணம் புண்படுகிறது.

தம்பி, உள்ளமே உலகம். ஏறு! ஏறு! ஏறு! மேலே! மேலே! மேலே!நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டிவைத்துக் கொண்டு பிழைக்க முயற்சிபண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிறி. உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ,மேலே, மேலே, மேலே!

தம்பி, தமிழ்நாடு வாழ்க என்றெழுது. தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது. தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது. அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களில் நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது. தமிழ்நாட்டில் ஒரே ஜாதிதான் உண்டு. அதன் பெயர் தமிழ்ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது. ஆணும் பெண்ணும் ஒருவரின் இரண்டு நிலைகள் என்றெழுது! அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது. பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது. பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது. 

தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு. தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிதைப்பவன் மேற்குலத்தானென்று கூவு. வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக. முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ்நாட்டிலே மலிந்திடுக எண்டு முழங்கிடு. சக்தி, சக்தி, சக்தி என்று பாடு. தம்பி- நீ வாழ்க.

உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே "ஜவாப்" எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாஸத்துக்கு "நாட்டுப் பாடல்கள்" அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞான பானுவிலும் ப்ரசுரம் செய்திடுக. "புதுமைப்பெண்" என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணாம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் எமக்கு அனுப்புக. தம்பி - உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை? நீ வாழ்க.

உனதண்ணன்
பாரதி.






13 comments:

பத்மநாபன் சொன்னது…

தமிழ் , தமிழ் என்று உணர்வு பூர்வமான பாரதியின் கடிதத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

உணர்வு பூர்வமான பாரதியின் கடிதத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

கடிதம் என்பதே மறந்து போன இன்றைய நாளில் அழகான ஒரு கடிதம். பகிர்வுக்கு நன்றி.

Chitra சொன்னது…

அவரின் கடிதத்தை வாசிக்கும் போது, புல்லரித்து போனது.... பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

வசந்தா நடேசன் சொன்னது…

ஏறு! ஏறு! ஏறு! மேலே! மேலே! பாரதியைப் படிப்பது என்றைக்கும் இனிப்புதான்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பாரதியின் எழுத்து தேனமுதாய் பாய்கிறது நெஞ்சில்......
நன்றி மக்கா............

ADHI VENKAT சொன்னது…

கடிதத்தில் இருக்கும் தமிழை கண்டு மெய் மறந்து போனேன். இப்போது வழக்கில் இருக்கும் தமிழ் எப்படியெல்லாம் மருவி போயிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு கடிதம் சரவணன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உணர்வு பூர்வமான பாரதியின் கடிதத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

GOOD HISTORICAL POST SIR..

ஸாதிகா சொன்னது…

இதுவரை அறியாத கடிதம் .பகிர்தலுக்கு நன்றி.

சத்ரியன் சொன்னது…

கலாநேசன்,

இக்கடிதம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

//தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது//

பள்ளிகள் மலிந்திருக்கிறது. கட்டணம்தான்..... மலையாக உயர்ந்திருக்கிறது. பாரதிக்கு இதையும் எழுதி அனுப்பி வைக்கனும்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சக்தி, சக்தி, சக்தி என்று பாடு. தம்பி- நீ வாழ்க.
பொன்னெழுத்துக்களில் பொறித்து தினமும் வாசித்து சக்தி பெற வேண்டிய வாசகங்கள்.

Quote

Followers