ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

நட்பு


வானத்துத் தாரகையொன்று
வந்திறங்கி என்னிடம்
ஆயிரம்கோடி ரூபாய்
ஆருயிர் நட்பு
எது வேண்டும் கேள் என்றது!
நான்
ஆயிரம் கோடி என்றேன்....
ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே!



அனைவருக்கும் நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சகோதரத் திருவிழா

இன்று ரக் ஷா பந்தன். வட இந்தியப் பண்டிகைகளில் என்னைக் கவர்ந்தது. அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால் காப்பு-கட்டு அதாவது உறவுகளின் பாதுகாப்பு முடிச்சு.

இந்நாளில் பெண்கள் குங்குமம், அரிசி, ராக்கி கயிறு மற்றும் இனிப்புகளை கடவுள் முன் வைத்து வழிபடுவர். பின்னர் அரிசியையும் குங்குமத்தையும் தன் சகோதரன் தலையில் தூவி, ராக்கியை மணிக்கட்டில் கட்டி ஆசி வழங்குவர்/வாங்குவர். இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் சொல்வர். அதை ஏற்றுக்கொண்ட சகோதரன் அவளுக்கு பதில் பரிசு கொடுத்து, உன் எல்லா சுக துக்கங்களிலும் உனக்கு உறுதுணையாய் இருப்பேன், உன்பக்கம் நிற்பேன் என உறுதியளிப்பான்.

பொதுவாக எல்லாப் பண்டிகைகளுமே குடும்ப உறவுகளை வலுப்படுத்தவே திட்டமிடப்படுள்ளது. ஒன்றாயிருப்பதின் சுகத்தை உணரச் செய்யவே பண்டிகைகள்.

சுமார் ஆறாயிரம் (?) வருடங்களாய் அதாவது சிந்து சமவெளியில் ஆரியர்கள் தோன்றியதில் இருந்து இப்பண்டிகை கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள். ரக்சா பந்தன் பற்றிய சில சுவாரஸ்ய நிகழ்வுகளை/செய்திகளைப் பார்ப்போம்.

ரோக்சனா (கி.மு.326)
அலெக்சாண்டர் (அவரே தாங்க தி கிரேட்) கி.மு.326 ல் இந்தியாவை ஆக்கிரமித்தார். அவரின் இந்திய மனைவி ரோக்சனா. பஞ்சாபை ஆண்ட போரு மன்னன் அலெக்சாண்டரை தோற்கடிக்கும் தருவாயில் ரோக்சனா கட்டிய ராக்கியை பார்த்து விட்டுவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் கிரேக்கத்தில் இருந்து இந்தியா மிக தூரம் என்பதாலும், நம்பிக்கையான ஒரு ஆள் இந்தியாவில் தேவை என்றும், போருவின் போர்த்திறம் கண்டு வியந்தும் அலெக்சாண்டர் போருவை நண்பனாக்கிக் கொண்டார் என்று வரலாறு சொல்கிறது.

ராணி கர்ணாவதி (கி.பி.1527)

பாபருக்கு எதிரான போரில் தன் கணவர் ராணா சங்கரம் சிங் (ராஜஸ்தானத்தில் ஒரு மாகாணத்தின் ராஜா) மாண்டதை அடுத்து தன் மகன் விக்ரம்ஜீத்தை அரசனாக்கினார். அவன் சரிவர ஆட்சி செய்யாததால் தானே ஆட்சிப் பொறுப்பேற்றார். அச்சமயம் குஜராத்தின் சுல்தான் பகதூர் ஷா படையெடுத்து வந்ததால் அவர்களைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே முகாலயப் பேரரசர் ஹுமாயுனுக்கு உதவி வேண்டி ராக்கி ஒன்றை கர்ணாவதி அனுப்பினார். ராக்கியை ஏற்றுக்கொண்டு தன் தங்கைக்காக படைகளை அனுப்பினார் ஹுமாயுன்.



ரக்சா பந்தனுடன் தொடர்புடைய சில புராண/இதிகாச கதைகளும் உண்டு.

லட்சுமி /பெ மகாவிஷ்ணு

மகாபலி என்னும் மன்னன் தன் மீது தீவிர பக்தியில் இருந்ததால் அவனைக்காக்க திருமால் பூலோகம் வந்தார். திரும்பவும் வைகுண்டம் அழைத்துச் செல்ல லட்சுமி ஏழை பிராமணப் பெண்ணாய் வேடமிட்டு வந்து மகாபலிக்கு ராக்கி கட்டியதாக ஒரு கதை உண்டு.

திரௌபதி

சிசுபாலனை வதைக்கும் போரில் கிருஷ்ணர் விரலில் காயம் ஏற்பட்டதாம். அப்போது திரௌபதி தன் சேலையைக் கிழித்து கிருஷ்ணரின் விரலில் கட்டினார். அதைத்தான் கௌரவர் அவையில் துகிலுரிக்கும் போது சேலையாய் கொடுத்தார் கிருஷ்ணர்.


பாசமலர்களுக்கென் நேசமிகு வாழ்த்துக்கள்.

புனேவில் தொடர் குண்டு வெடிப்பு


நேற்றிரவு ஏழரை மணியில் இருந்து ஏழே முக்காலுக்குள் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் நான்கு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு மக்கள் நடமாட்டம் மிகுந்த J M சாலையில் உள்ள பாலகந்தர்வ் தியேட்டர் அருகில் வெடித்தது. நேற்று மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முன்னாள் மின்துறை மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஒரு விருது வழங்கும் விழாவிற்காக இங்கு வரவிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது குண்டு மெக் டொனால்ட்ஸ் கடையின் குப்பைத்தொட்டியிலும் மூன்றாவது தேனா வங்கியின் கிளையருகிலும் நான்காவது கர்வரே பாலம் அருகிலும் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் இருவர் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதுமில்லை. இந்த குண்டுகள் அனைத்தும் குறைந்த சக்தி கொண்ட பென்சில்-செல் டெட்டனேட்டர்களால் செய்யப்பட்டவை. ஐந்தாவது குண்டு செயலிழக்கப் பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பதினேழு உயிர்களை காவு வாங்கிய ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்புச் சம்பவமும் இதே புனே நகரில் நடந்தது நினைவுகொள்ளத்தக்கது.
      

Quote

Followers