கடந்த வெள்ளி அன்று தில்லி தமிழ்ச் சங்கத்தில் வடக்கு வாசல் நடத்திய "சுப்புடு நினைவில் ஒரு இசைப் பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா"வுக்குச் சென்றிருந்தேன். அந்நிகழ்வில் தில்லிவாழ் தமிழ்ப்பதிவர், மொழிபெயர்ப்பாளர், ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியை சுசீலா அம்மாவின் தேவந்தி என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப் பட்டது. நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றியவர் திரு.அப்துல் கலாம் அவர்கள். தேன்தமிழ் கலந்து அவர் ஆற்றிய உரையிலிருந்து சில தித்திக்கும் துளிகள்....
சுப்புடு தர்பார் என்னும் தலைப்பில் சுப்புடு சார் எழுதிய புத்தகங்களை சில ஆண்டுகளுக்கு முன் படித்தேன். பர்மாவில் இருந்து அகதியாய் நடந்தே இந்தியா வந்தது பற்றியும் சுதந்திர போராட்டத்தின் உச்ச கட்டத்தில் தில்லியில் நாடகங்கள் நடத்தியது பற்றியும் அதில் எழுதியிருந்தார். அதைப் படித்ததும் சுப்புடு சாரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தேன். அங்குள்ள மொகல் கார்டன் நந்தவனத்தில் நெடுநேரம் செலவிட்டார். இயற்கை அழகுகளை ரசித்தார். ரோஜா மலர்களை வெகுநேரம், சுமார் ஒருமணி நேரம் வருடிக் கொண்டிருந்தார். அப்போது அதன் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் கடந்த பின்னர் 18 -01 - 2005 ல் எனக்கு சுப்புடு சாரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், நான் தொண்ணூரை நெருங்கி விட்டேன் நெற்றியில் திருநீறு பூசி தென்திசைப் பயணம் செல்ல நேரம் வந்துவிட்டது. ஒருவேளை நான் மரணம் எய்தினால் எனக்கு மொகல் கார்டனில் இருந்து ஒற்றை ரோஜா தருவீர்களா? என்று எழுதியிருந்தார். பின்னொருநாள் நள்ளிரவில் துக்க செய்தி கேட்டதும் உடனே சென்று ரோஜாமலர்களைப் பறித்து வந்து சுப்புடு சாருக்கு அஞ்சலி செலுத்தினேன்.
நீ நீயாக இரு...
இளைய நண்பர்களே... இளைய மனம் கொண்டோரே...வீட்டிலே மின்சார பல்பைக் கண்டதும் தாமஸ் ஆல்வா எடிசன் நம் நினைவுக்கு வருகிறார். வானில் சாத்தமிட்டு சீறிப் பாயும் ஆகாய விமானங்களைப் பார்க்கையில் ரைட் சகோதரர்கள் மனதில் வருகிறார்கள். தொலைபேசி / கைப்பேசிப் பார்க்கையில் கிரகாம்பெல் மனதிற்கு அருகாமையில் வருகிறார். கடல் நிறம் ஏன் நீலமாக இருக்கிறது என்ற கேள்வி வருகையில் லண்டனில் இருந்து கல்கத்தாவுக்கு கப்பல்வழிப் பயணம் செய்தபோது இந்திய விஞ்ஞானி நிறப்பிரிகை பற்றி கண்டறிந்த ராமன் விளைவு நினைவுக்கு வருகிறது. அகிம்சா தர்மம் என்ற கத்தியில்லா ரத்தமில்லா ஆயுதத்தைக் கொண்டு உலகுக்கே புதுப் படம் நடத்தினார் காந்தி. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
நல்ல புத்தகங்கள்
நல்ல கற்பனை சக்தியை வளர்க்கும்.
நல்ல கற்பனைச் சக்தி
நல்ல சிந்திக்கும் திறனை வளர்க்கும்
நல்ல சிந்தனை
சிறந்த அறிவைக் கொடுக்கும்
சிறந்த அறிவு
நம்மை மேம்பட வைக்கும்.
இன்று வடக்கு வாசல் பதிப்பகத்தார் ஐந்து அருமையான புத்தகங்களை வெளியிடுகின்றனர்.
சிந்தனைச் சிதறல்கள் - ய.சு.ராஜன்
விருட்சங்களாகும் சிருவிதைகள் - சி.டி.சனத்குமார்
சனிமூலை - ராகவன் தம்பி
வடக்குவாசல் நேர்காணல்கள் - ராகவன் தம்பி
தேவந்தி - எம்.ஏ.சுசீலா
(தேவந்தி சிறுகதைத் தொகுப்பை திரு. அப்துல் கலாம் அய்யா வெளியிட சுசீலா அம்மாவின் மகள் மீனு பிரமோதும், நண்பர் பதிவர் விட்டலனும் பெற்றுக்கொள்கிறார்கள்)
ஒவொரு நூலில் இருந்தும் மேற்கோள் காட்டி வாழ்த்திக் கொண்டே வந்தவர். இறுதியாய் தேவந்தி என்னும் அருமையான சிறுகதைத் தொகுப்பு... தேவந்தி சிலபதிகாரக் கண்ணகியின் தோழி (சரி தானேம்மா என்கிறார் சுசீலா அம்மாவைப் பார்த்து). சாத்திரம் அன்று...சதி! என்னும் கதையில் இருந்து, "சரயு நீரைக் கண்களில் ஒற்றித் தலையில் தெளித்தபடி... ஆற்றில் இறங்கி, அதன் ஆழத்தில் அமிழ்ந்தபடி போய்க்கொண்டே இருக்கிறான் ராமன். எங்கோ தொடுவானத்தில் சமநீதி என்னும் உதயத்தின் விடியல் மெல்லியதொரு கீற்றாய் தெரிகிறது" என்ற வரிகளைப் பாராட்டினார்.
முத்தாய்ப்பாய் ஒரு கவிதை சொல்லி அகிருந்த அனைவரையும் கூடவே சொல்லச் சொன்னார்.
நான் பிறந்தேன்
அரும்பெரும் சக்தியுடன்...
நான் பிறந்தேன்
நற்பண்புகளுடன்...
நான் பிறந்தேன்
கனவுடன்...
வளர்ந்தேன்
நல்ல எண்ணங்களுடன்...
நான் பிறந்தேன்
உயர் எண்ணங்களை
செயல்படுத்த...
நான் பிறந்தேன்
ஆராய்ச்சி உள்ளத்துடன்...
நான் பிறந்தேன்
ஆகாய உச்சியில் பறக்க...
நான் பூமியில்
ஒருபோதும் தவழ மாட்டேன்.
தவழவே மாட்டேன்.
ஆகாய உச்சிதான்
என் லட்சியம்
பறப்பேன் வானில்
பறந்துகொண்டேயிருப்பேன்....