ஞாயிறு, 20 ஜனவரி, 2013

இ மெயிலைக் கண்டுபிடித்தவர் தமிழன்



தனது 14-ஆவது வயதில் இ மெயிலைக் கண்டுபிடித்த சாதனையாளர் ஓர் தமிழன். அமெரிக்காவில் வசிக்கும் அந்த ராஜபாளையத்துக்காரரின் பெயர் சிவா அய்யாதுரை. அவரைப் பற்றி நான் வாசித்த சில தகவல்கள்...

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள "யுனிவர்சிட்டி ஆஃப் மெடிஸின் அண்ட் டென்ஸ்ட்ரி'யில் கம்ப்யூட்டர் புரோகிராம் பணிக்காகச் சேர்ந்த போது இவர் உயர்நிலைப்பள்ளி மாணவர். அங்கே உள்ள அலுவலகத்தில் உள்ள எல்லா தகவல் பரிமாற்றங்களும் காகிதத்தில் எழுதப்பட்டு அதன் மூலமே நடந்தன. இது மனித உழைப்பையும், நேரத்தையும் அதிகமாக எடுத்துக் கொண்டதால், இந்தத் தகவல் தொடர்பு பணியைக் கம்ப்யூட்டர்மயமாக்க முடியுமா? என்று தோன்றியபின்
தொடர்ந்து பலநாட்கள் தூக்கம் இல்லாமல், கடுமையாக உழைத்து தகவல் தொடர்புக்கான கம்ப்யூட்டர் புரோகிராமை உருவாக்கினார் . அதன் Code ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளை உடையதாக இருந்தது. அதை E MAIL என்று அழைத்தார் .

இவர் இந்த E MAIL -ஐக் கண்டுபிடிப்பதற்கு முன்பு கம்ப்யூட்டரின் மூலம் செய்திகளை அனுப்புவது இருந்ததா? என்றால் இருந்தது. ஆனால் ஒரு கம்ப்யூட்டருக்கும் இன்னொரு கம்ப்யூட்டருக்கும் இருந்த நேரடி இணைப்பின் மூலமாக இருந்தது. அப்படி அனுப்பியதும் வெறும் டெக்ஸ்ட் மெசேஜ்ஜாக மட்டுமே இருந்தது.

இவர்தான் தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் மூலம் செய்திகளை அனுப்புவதற்கு புரோகிராமை உருவாக்கியவர் . FORTRAN IV என்ற programming language -ஐப் பயன்படுத்தி அதை உருவாக்கினார் . இது DATABASE, LAN(LOCAL AREA NETWORK) உடன் தொடர்புடையதாக இருந்தது. இ மெயில் என்பது டெக்ஸ்ட் மெசேஜ் அல்ல. அது ஒரு ஸிஸ்டம். இ - மெயிலில் உள்ள INBOX, OUTBOX, FROM, TO, SUBJECT, CC, BCC, DATA, BODY, FORWARD, REPLY எல்லாம் இவர் உருவாக்கியவை.

இவரது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை வாங்க 1982 இல் அமெரிக்காவின் காப்புரிமை அலுவலகத்தை அணுகினார் . அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி என்று ஆலோசனை கூறக் கூட அப்போது யாரும் இல்லை. அவருக்கு அப்போது 19 வயது. 1982 ஆகஸ்ட் 30 இல் இ - மெயிலைக் கண்டுபிடித்ததற்காக காப்புரிமை கிடைத்தது.

ஆனால் பலர் தாங்கள்தாம் இ - மெயில் கண்டுபிடித்ததாகக் கூறிக் கொண்டனர். ஆனால் இ - மெயில் கண்டுபிடிக்க இவர் செய்த முயற்சிகளைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் உலக அளவில் புகழ்பெற்ற மொழியியல், தத்துவத்துறைப் பேராசிரியர் நோம் சாவ்ஸ்கி. இவர்தான் தான் இ மெயில் கண்டுபிடித்தவர் சிவா அய்யாதுரை என்று அவர் பகிரங்கமாக அறிவித்து வருகிறார். இவர் கண்டுபிடிப்பதற்கு முன்பு இ மெயில் என்ற சொல் உலகத்தில் எந்த அகராதியிலும் இல்லை.

இ - மெயிலை நான் கண்டுபிடிக்கவில்லை என்று சிலர் கூறுவதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம் என்று சிவா சொன்ன காரணங்கள்...
  • நான் ஓர் இந்தியன்,
  • நான் புலம் பெயர்ந்தவன்
  • தமிழன்
  • கறுப்புநிறத்தவன்
  • நெவார்க் என்ற சிறிய ஊரைச் சேர்ந்தவன்
இவற்றைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்குத் தெரியவில்லை.

அதற்குப் பின்பு  இவர்தான் இ - மெயிலைக் கண்டுபிடித்தவர்  என்பதை உலக அளவில் புகழ்பெற்ற "சுமித்சோனியன் தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்"அங்கீகரித்தது. இ - மெயிலை இவர் கண்டுபிடிக்கும்போது பயன்படுத்திய நாடாக்கள், பதிவுகள், காப்புரிமை மற்றும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரிகளில் உள்ள Code கள் எல்லாவற்றையும் அங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இவரை Dr.Email என்றே குறிப்பிடுகிறது.



செவ்வாய், 1 ஜனவரி, 2013

அசைபோடுவோம்


 
இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு (மங்கல்யான்)  செயற்கைக்கோள்  அனுப்பப்போகும்  இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாம் 2012-ல் இந்தியாவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை அசைபோடுவோமா...
  • இந்தியா பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத விபரப்பகிர்வு 
  • 42 சதவீத இந்தியக் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்தில்லை HUNGaMa அறிக்கை 
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியது தொடர்பான ஊழல் வழக்கில் சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் 
  • ராஜாவால் வழங்கப்பட்ட 122 2G  அலைகற்றை உரிமங்கள் உச்சநீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
  • கர்நாடக சட்டமன்றத்தில் சூடான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் போது கைப்பேசியில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்த மூன்று பிஜேபி அமைச்சர்கள் பிடிபட்டனர்.
  • இந்திய ரயில்வே பட்ஜெட்டை வழங்கிய ரயில்வே அமைச்சர் தினேஷ்  திரிவேதி நான்கே நாட்களில் ராஜினாமா செய்தார் 
  • ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் போர்விதி மீறல்கள் தொடர்பாக இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது  
  • சென்னை மற்றும் கல்கத்தாவில் நிலநடுக்கம் 
  • சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா , சமூக சேவகியும் தொழிலதிபருமான அணு அகா ஆகிய மூவரும் ராஜ்யசபா உறுப்பினர்களாக ஜனாதிபதி பிரதிபா பாட்டிலால் பரிந்துரைக்கப்பட்டனர். 
  • சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ்  பால் மேனன் 12 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.  
  • முப்பது வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுர்ஜீத் சிங் இந்திய திரும்பினார் 
  • பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • வடகிழக்கு மாநில மக்கள் பெங்களூருவில் தாக்கப்படப் போவதாக கிளம்பிய குருஞ்செய்திப் புரளியால் ஆயிரக்கணக்கானோர் பெங்களூருவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணித்தனர் 
  • 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது உயிருடன் பிடிக்கப்பட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப்  தூக்கிலிடப்பட்டான்.
  • தில்லி பேருந்தில் கூட்டான பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய 23 வயது மருத்துவ மாணவி 13 நாட்கள் உயிருக்காக போராடி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தாள்.
வாடும் பயிரைக் கண்டு வாடிச் சாகும் விவசாயி, விக்கிரம்மதித்தன் கதையாய்த் தொடரும் மீனவ படுகொலை, அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்கள், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்ற எதிர்ப்புக் குரல்களுக்கிடையே வந்துநிற்கும் வால்மார்ட், மக்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் சாதிக் கலவரங்கள், நாட்கள் செல்லச் செல்ல நகைச்சுவையாகிப் போன தொடர் மின்வெட்டு .....இன்னும் இன்னும் நல்லது கெட்டதுகள் நடந்துகொண்டேயிருக்க 21.12.2012 அன்று அழிந்து   போகாமல் புதிய நம்பிக்கையோடு பூத்துக் குலுங்கும் பூமியைப் போற்றி புத்தாண்டைத் துவங்குவோம்.

அனைவருக்கும் எனதினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


 

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

நட்பு


வானத்துத் தாரகையொன்று
வந்திறங்கி என்னிடம்
ஆயிரம்கோடி ரூபாய்
ஆருயிர் நட்பு
எது வேண்டும் கேள் என்றது!
நான்
ஆயிரம் கோடி என்றேன்....
ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே!



அனைவருக்கும் நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சகோதரத் திருவிழா

இன்று ரக் ஷா பந்தன். வட இந்தியப் பண்டிகைகளில் என்னைக் கவர்ந்தது. அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால் காப்பு-கட்டு அதாவது உறவுகளின் பாதுகாப்பு முடிச்சு.

இந்நாளில் பெண்கள் குங்குமம், அரிசி, ராக்கி கயிறு மற்றும் இனிப்புகளை கடவுள் முன் வைத்து வழிபடுவர். பின்னர் அரிசியையும் குங்குமத்தையும் தன் சகோதரன் தலையில் தூவி, ராக்கியை மணிக்கட்டில் கட்டி ஆசி வழங்குவர்/வாங்குவர். இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் சொல்வர். அதை ஏற்றுக்கொண்ட சகோதரன் அவளுக்கு பதில் பரிசு கொடுத்து, உன் எல்லா சுக துக்கங்களிலும் உனக்கு உறுதுணையாய் இருப்பேன், உன்பக்கம் நிற்பேன் என உறுதியளிப்பான்.

பொதுவாக எல்லாப் பண்டிகைகளுமே குடும்ப உறவுகளை வலுப்படுத்தவே திட்டமிடப்படுள்ளது. ஒன்றாயிருப்பதின் சுகத்தை உணரச் செய்யவே பண்டிகைகள்.

சுமார் ஆறாயிரம் (?) வருடங்களாய் அதாவது சிந்து சமவெளியில் ஆரியர்கள் தோன்றியதில் இருந்து இப்பண்டிகை கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள். ரக்சா பந்தன் பற்றிய சில சுவாரஸ்ய நிகழ்வுகளை/செய்திகளைப் பார்ப்போம்.

ரோக்சனா (கி.மு.326)
அலெக்சாண்டர் (அவரே தாங்க தி கிரேட்) கி.மு.326 ல் இந்தியாவை ஆக்கிரமித்தார். அவரின் இந்திய மனைவி ரோக்சனா. பஞ்சாபை ஆண்ட போரு மன்னன் அலெக்சாண்டரை தோற்கடிக்கும் தருவாயில் ரோக்சனா கட்டிய ராக்கியை பார்த்து விட்டுவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் கிரேக்கத்தில் இருந்து இந்தியா மிக தூரம் என்பதாலும், நம்பிக்கையான ஒரு ஆள் இந்தியாவில் தேவை என்றும், போருவின் போர்த்திறம் கண்டு வியந்தும் அலெக்சாண்டர் போருவை நண்பனாக்கிக் கொண்டார் என்று வரலாறு சொல்கிறது.

ராணி கர்ணாவதி (கி.பி.1527)

பாபருக்கு எதிரான போரில் தன் கணவர் ராணா சங்கரம் சிங் (ராஜஸ்தானத்தில் ஒரு மாகாணத்தின் ராஜா) மாண்டதை அடுத்து தன் மகன் விக்ரம்ஜீத்தை அரசனாக்கினார். அவன் சரிவர ஆட்சி செய்யாததால் தானே ஆட்சிப் பொறுப்பேற்றார். அச்சமயம் குஜராத்தின் சுல்தான் பகதூர் ஷா படையெடுத்து வந்ததால் அவர்களைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே முகாலயப் பேரரசர் ஹுமாயுனுக்கு உதவி வேண்டி ராக்கி ஒன்றை கர்ணாவதி அனுப்பினார். ராக்கியை ஏற்றுக்கொண்டு தன் தங்கைக்காக படைகளை அனுப்பினார் ஹுமாயுன்.



ரக்சா பந்தனுடன் தொடர்புடைய சில புராண/இதிகாச கதைகளும் உண்டு.

லட்சுமி /பெ மகாவிஷ்ணு

மகாபலி என்னும் மன்னன் தன் மீது தீவிர பக்தியில் இருந்ததால் அவனைக்காக்க திருமால் பூலோகம் வந்தார். திரும்பவும் வைகுண்டம் அழைத்துச் செல்ல லட்சுமி ஏழை பிராமணப் பெண்ணாய் வேடமிட்டு வந்து மகாபலிக்கு ராக்கி கட்டியதாக ஒரு கதை உண்டு.

திரௌபதி

சிசுபாலனை வதைக்கும் போரில் கிருஷ்ணர் விரலில் காயம் ஏற்பட்டதாம். அப்போது திரௌபதி தன் சேலையைக் கிழித்து கிருஷ்ணரின் விரலில் கட்டினார். அதைத்தான் கௌரவர் அவையில் துகிலுரிக்கும் போது சேலையாய் கொடுத்தார் கிருஷ்ணர்.


பாசமலர்களுக்கென் நேசமிகு வாழ்த்துக்கள்.

புனேவில் தொடர் குண்டு வெடிப்பு


நேற்றிரவு ஏழரை மணியில் இருந்து ஏழே முக்காலுக்குள் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் நான்கு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு மக்கள் நடமாட்டம் மிகுந்த J M சாலையில் உள்ள பாலகந்தர்வ் தியேட்டர் அருகில் வெடித்தது. நேற்று மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முன்னாள் மின்துறை மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஒரு விருது வழங்கும் விழாவிற்காக இங்கு வரவிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது குண்டு மெக் டொனால்ட்ஸ் கடையின் குப்பைத்தொட்டியிலும் மூன்றாவது தேனா வங்கியின் கிளையருகிலும் நான்காவது கர்வரே பாலம் அருகிலும் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் இருவர் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதுமில்லை. இந்த குண்டுகள் அனைத்தும் குறைந்த சக்தி கொண்ட பென்சில்-செல் டெட்டனேட்டர்களால் செய்யப்பட்டவை. ஐந்தாவது குண்டு செயலிழக்கப் பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பதினேழு உயிர்களை காவு வாங்கிய ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்புச் சம்பவமும் இதே புனே நகரில் நடந்தது நினைவுகொள்ளத்தக்கது.
      

சனி, 5 மே, 2012

ஒற்றை விரல் ஓவியம்


பேருந்துப் பயணத்தில்
பின்புறம் திரும்பி
பேசுவதுபோல் ஒன்று...

புத்தகக் குழந்தைகளை
மார்பில் தாங்கியபடி
புன்னகைப்பது போல் ஒன்று...

அலுவல் நிமித்தமாய் - நான்
அயலூர் செல்கையில்
கையசைப்பது போல் ஒன்று...

சமையலறைக் கரப்பைபார்த்து
அலறித்துடித்து நீ
அஞ்சுவதுபோல் ஒன்று...

கடைத்தெரு போயெனை
காய்கறி வாங்கச்சொல்லி
கெஞ்சுவதுபோல் ஒன்று...

பிறக்காதக் குழந்தையின்
பிஞ்சுவிரல் பிடித்து 
கொஞ்சுவதுபோல் ஒன்று...

இப்படி நீ
புன்னகைப்பது...பூப்பறிப்பது...
வெட்கப்படுவது... வேடிக்கை பார்ப்பது...
முட்கள் குத்தியது...முகப்பரு வந்ததென
ஒவ்வொரு நிகழ்வையும்
ஓவியமாய் வரைந்தேன்.

பின்னொருநாள்
தூரிகை எல்லாம்
தோற்றுப்போனது -நீ
தொட்டுத்தொட்டு வரைந்த
ஒற்றை விரல் ஓவியத்தில்.....


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

குளிர் விட்டுப் போனதே!

ஊசிக்காற்றை ஊதி
உள்ளத்தை வெகுவாய்ச் 
சுடுங்குளிர்.

நாலிரண்டு வாரங்கள்
நகரைப் பனியாக்கும் 
நெடுங்குளிர்.

அடுத்தவர் மூச்சு 
ஆவியாய் நம்மேல் 
படுங்குளிர்.

இடைகாட்டும் விதமாய் 
உடைகட்டும் மங்கையரை 
இழுத்துப் போர்த்தி 
விடுங்குளிர்.

காதல் செடியை 
மனதில் மிகுதியாய் 
நடுங்குளிர்.

கம்பளியின்றித் 
தூக்கம் தாராக் 
கடுங்குளிர்.

வீடில்லா ஏழைகளை 
வீதியில் சாகடிக்கும் 
கொடுங்குளிர்.

கலவையாய்  உணர்வெழுப்பிக்
கலைந்து போனபின்னும் 
எழுதாக் கவிதையை 
என்னுள் விதைத்து 
நெஞ்சைத் 
தொடுங்குளிர்... 

Quote