வியாழன், 4 நவம்பர், 2010

அயலூர் வாழ்க்கை

தலைக்கு எண்ணெய்வைத்துக்
குளிப்பாட்டத் தாயுமில்லை.
இலைக்கு வகைவகையாய்
இனிப்போடு விருந்துமில்லை.

சித்திரைத் தேரிழுக்கச்
செல்லவும் இயலவில்லை.
புதுத்திரைப் படம்பார்க்க
அரங்குகள் எதுவுமில்லை.

பூசணிப்பூ கோலமில்லை
பூப்போட்ட தாவணியில்லை
மாசம் ஒருதடவை
மல்லூர்போக முடிவதில்லை.

தலைமுடி கோதும்
படிக்கட்டுப் பயணமில்லை
இலைமறை காயாய்
இனிக்கப்பேச யாருமில்லை.

புதுத்துணி எடுத்துடுத்த
பொங்கல்வைத்துக் கொண்டாட
எங்களூர் சாமிகோவில்
இந்தூரில் ஏதுமில்லை.

குதித்தோடி விளையாட
கொய்யா மரமுமில்லை
செருப்பின்றி நான்நடக்க
வரப்புகள் ஏதுமில்லை.

மேலிருந்து நான்குதிக்க
மேற்காட்டுக் கிணறுமில்லை
பென்சில்பிடித்து எழுதவைத்த
பெரமனூர் டீச்சரில்லை.

ஒற்றையடிப் பாதையில்லை
உட்காரப் பாறையில்லை.
கற்றைவிழிப் பெண்ணைப்பார்த்து
கண்ணடிக்கும் நண்பனில்லை.

கயிறுகட்டி ஊஞ்சலாட
புளியமரம் ஏதுமில்லை
வைரமுத்து நான்படிக்க
புத்தகமும் கிடைப்பதில்லை.

இல்லை...இல்லை
இல்லை...இல்லை

செழிப்பாய் வாழ்வதற்கு
சேமிப்பு உயர்ந்தாலும் 
அலுப்பாய்த் தானிருக்கு
அயலூர் வாழ்க்கை.

26 comments:

Philosophy Prabhakaran சொன்னது…

உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல்முறையாக வருகை தருகிறேன்... கவிதை நன்றாக இருக்கிறது... இனி உங்கள் வலைப்பூவை பின்தொடர்கிறேன்...

ராம்ஜி_யாஹூ சொன்னது…

முப்பதாம் தேதி வரும் சம்பளப் பணத்தில் இதர இல்லைகள் யாவும் மறந்து போகின்றன.

ஜெய்லானி சொன்னது…

மனசுக்குள்ள இருக்குள்ள விடுங்க பாஸ் அதுப்போதும் ..!! :-))

பெயரில்லா சொன்னது…

ARUMAI

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

தீரா ஏக்கம்!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

அன்பரசன் சொன்னது…

பிரமாதம்ங்க...
உள்ளுணர்வை அருமையா சொல்லி இருக்கீங்க.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

சந்தம் நன்றாக வந்திருக்கிறது.வாழ்த்துக்கள்.
தில்லியில் வாழ நேர்ந்தது முதல் இதே புலம் பெயர் சோகம் என்னுள்ளும்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

என்னதான் சேமிப்பு, பணம் கிடைத்தாலும், நம் பிறந்த மண்ணின் சுகமும், மணமும் கிடைப்பதில்லை தான். அழகிய கவிதை.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ்

செல்வா சொன்னது…

/புதுத்துணி எடுத்துடுத்த
பொங்கல்வைத்துக் கொண்டாட
எங்களூர் சாமிகோவில்
இந்தூரில் ஏதுமில்லை.//

ரொம்ப நல்லா இருக்குங்க ..!!

செல்வா சொன்னது…

//செழிப்பாய் வாழ்வதற்கு
சேமிப்பு உயர்ந்தாலும்
அலுப்பாய்த் தானிருக்கு
அயலூர் வாழ்க்கை.
//

உண்மைலேயே ரொம்ப ரொம்ப கலக்கலா இருக்குங்க ..!!

எம் அப்துல் காதர் சொன்னது…

கவிதை அருமை!!

கலாநேசன் சார், தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும், குறிப்பாய் "அன்பு மகளுக்கும்" எங்களின் மனம் நிறைந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்!!

சிவராம்குமார் சொன்னது…

உண்மை!!! தீபாவளி வாழ்த்துக்கள்!!!

ஸாதிகா சொன்னது…

அருமையான கவிதை.தாய்மண்ணின் பிரிவை வெகு அழகாக கவிதை வரிகளில் சொல்லி விட்டீர்கள்.

R. Gopi சொன்னது…

நல்லா இருந்தது கவிதை. என்ன பண்றது. இப்படித்தான் ஆகி விட்டது பெரும்பாலோர் வாழ்க்கை

Unknown சொன்னது…

@ ராம்ஜி_யாஹூ : இல்லைங்க...
@ ஜெய்லானி : ஆமாங்க...
@ பெயரில்லா : நன்றிங்க....
@ சைவகொத்துப்பரோட்டா : ஆமாங்க...
@ அன்பரசன் : நன்றிங்க....

Unknown சொன்னது…

@ எம்.ஏ.சுசீலா : மிக்க நன்றி அம்மா
@ வெங்கட் நாகராஜ் :நன்றி
@ ப.செல்வக்குமார் :நன்றி
@ எம் அப்துல் காதர் :நன்றி
@ சிவா :நன்றி
@ ஸாதிகா :நன்றி
@ Gopi Ramamoorthy :நன்றி

அன்புடன் மலிக்கா சொன்னது…

உலகிலுள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

Unknown சொன்னது…

அழகான ஆழமான கவிதை வரிகள்..

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

vanathy சொன்னது…

நிறைய மிஸ் பண்ணுறீங்க போலிருக்கு. கவிதை அருமை.

சுபத்ரா சொன்னது…

ஐயோ.. கவித கவித... கலக்கிட்டீங்க. அர்த்தமுள்ள ரிதமிக் வரிகள்.

மனோ சாமிநாதன் சொன்னது…

"செழிப்பாய் வாழ்வதற்கு
சேமிப்பு உயர்ந்தாலும்
அலுப்பாய்த் தானிருக்கு
அயலூர் வாழ்க்கை."

நிதர்சனமான வார்த்தைகள்! தாய்மண்னை விட்டு நெடுந்தூரம் சென்று வசிக்கும் அத்தனை பேரின் புலம்பல்கள்தான் இவை! அருமையான கவிதை! பாராட்டுக்கள்!!

Chitra சொன்னது…

அருமையான கவிதை!

ஹேமா சொன்னது…

பிறந்த மண்ணைவிட்டுப் பிரிந்திருக்கும் தவிப்பை உணர்ந்தாலே தவிர இப்படி வரிகளில் கொட்டமுடியாது கலாநேசன் !

தினேஷ்குமார் சொன்னது…

பிரிவை அழகாக படம் பிடிக்கின்றன வரிகள்
பிரிவென்றும்
விரிவல்லவே
விரைந்தோடும்
காலம்
வழிவந்து
சேரும்............

Prasanna சொன்னது…

என் நண்பர்கள் சொல்வதுண்டு.. 'நல்லா சம்பாரிச்சிட்டு, கொஞ்சம் வயசான பெறகு கிராமத்துல போய் செட்டில் ஆகிடனும்'..

Quote

Followers