வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பதிவுலகில் நான்....சுயபுராணம்.

முதல் தொடர்பதிவு எழுத என்னை அழைத்த தம்பி செல்வா மற்றும் மனோவுக்கு என் நன்றிகள்.

1 .) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ..?
 கலாநேசன் (ஆமா இந்த கேள்வி எதுக்கு?)

2 .) அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா..? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக் காரணம் என்ன ..?
என் உண்மையான பெயர் சரவணன் (கலாநேசன் என்பதும் உண்மையே!). சின்ன வயசுல இருந்தே (அதாவது நான் ச.ஆ.பெரமனூரில் உள்ள ஊ.ஒ.துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த நாளில் இருந்தே) நான் போகும் இடத்திலெல்லாம் என்னைத்தவிர யாரேனும் சரவணன் நிச்சயம் இருப்பார்கள். அப்புறம் வேறுபடுத்திக் காட்ட அடைமொழியோ/பட்டப்பெயரோ வைக்க வேண்டி இருக்கும். அட அதிவுலகில் கூட பாருங்க.... சரவணக்குமார், ஆர்.வி.சரவணன், மதுரை சரவணன் என நிறைய சரவணன்கள். அதனால் தான் நான் கலாநேசன்.

3 .)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி ?
என் நண்பன் முரளி மூலமாகத் தான் எனக்கு வலைப்பூ அறிமுகம் கிடைத்தது. (யாரும் கொலைவெறியோடு அவரைத் தேட வேண்டாமெனக் கேட்டுக்கொல்கிறேன் சாரி கொள்கிறேன்). பெரும்பாலும் பதிவுலகம் பற்றிய பட்டய படிப்பு படித்துவிட்டுத்தான் (அதாவது ஒரு ஆறு மாசம் மற்ற பதிவுகளை படித்துவிட்டு அப்புறம் ஒரு ஆறு மாசம் பின்னூட்டம் மட்டும் எழுதிவிட்டு) வலைப்பூ துவங்குவார்கள். நானோ வலைப்பூ துவங்கி விட்டு சுமார் ஆறு மாதம் ஆளில்லாக் கடையில் டீ ஆத்திக்கொண்டிருந்தேன். அப்புறம் தமிழ் வலைப்பதிவர் குழுமம், தமிளிஷ்(இப்போ இன்ட்லி), தமிழ் மணம் மூலம் நண்பர்கள் கிடைத்தனர். 

4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?
 பிரபலம் என்பதே வெறும்பேச்சு. தமிழ் கூறும் நல்லுலகக்கடலில் பதிவுலகம் என்பதோர் சிறுகுளம். ஆனாலும் பதிவெழுத துவங்கிய காலத்தில் பின்னூட்டதிற்காய் ஏங்கும் மனம் (அட இப்பவும்தாங்க ஆனா கொஞ்சம் தெளிவாயிட்டேன்). புகழ் வெளிச்சதிற்கு ஆசைப்பட்டு இலவசமாய் கிடைப்பதையே ஒன்பது டாலர் காசு கொடுத்து வாங்கிய காமெடியெல்லாம் நடந்தது(மின்மினி). ஆனாலும் இன்ட்லியில் இருந்து உங்கள் பதிவு பிரபலமாகிவிட்டது என்று கடந்த மூன்று மாதத்தில் நான் எழுதிய எல்லா பதிவுகளுக்கும் மின்னஞ்சல் வரும்போது மகிழ்வாய் இருக்கிறது. அது இன்னும் எழுத நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருகிறது.

5 .) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விசயங்களைப் பகிர்ந்ததுண்டா ..? அதன் விளைவு ..?
சில சமயம் பகிர்ந்ததுண்டு. ஆனால் அவை எனக்குத்தான் சொந்த விஷயங்கள். வாசிப்பவர்களுக்கு அதுவும் ஒரு கவிதை அவ்வளவே!

6 .) நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா ..?
 பணம் சம்பாதிப்பேனா என்று தெரியாது. ஆனால் இன்னும் நிறைய நண்பர்களை சம்பாதிப்பேன். என் படைப்புகளை பதிவு செய்யும் தளமாகவே கருதுகிறேன். நிச்சயம் இது பொழுதுபோக்குமல்ல. மண் பயனுற கடுகளவு காரியமேனும் செய்யவேண்டும் இந்த வலைப்பூவைக்கொண்டு.

7 .) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்..? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன ..?
  ஒன்றே நன்று.

8 .) மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு எப்போதாவது பொறாமை அல்லது கோபம் வந்ததுண்டா ..?
ஆம்.
'பிறர்க்கின்னா பின்னூட்டம் செய்யின் - தமக்கின்னா
புனைவாய்த் தானே வரும்'
என்ற புதுக்குறள் மறந்து தனிமனித தாக்குதல் செய்வோர் மீதும், சாதீயம் மற்றும்  இன்னும் பிற ஈயங்கள் காய்ச்சி நம் கண்ணில் ஊற்றுவோர் மீதும் கோபம் வருகிறது.

9 .) உங்கள் வலைபதிவு பற்றி உங்களை முதல் முதலில் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ..?
இதுவரை யாருடனும் நேரிலோ/தொலைபேசியிலோ உரையாடியதில்லை. முதலில் பாராட்டியது அண்ணன் கே.ஆர்.பி.செந்தில். 'பதிவுலகம் உங்களை அன்போடு வரவேற்கிறது' என்று சொல்லி முதல் follower ஆனார். அவர்தான் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினார்.

10 .) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்திற்குத் தெரியவேண்டிய அனைத்தையும் கூறுங்கள் ..?
நான்  முதுநிலை மருந்தாக்கியல் படித்துவிட்டு தலைநகரில் உள்ள ஒரு மருந்துக் கம்பெனியில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணிபுரிகிறேன். சொந்த ஊர் சேலம். அலுவலகப் பணிச்சுமை என்னை அழுத்தி எடுத்தபோதும் தீராத் தமிழ்க்காதல் என்னை திரும்பவும் எழுத வைக்கிறது. நிறைய படிக்கும் ஆர்வமுள்ளது. வேறென்ன சொல்ல....




இப்பதிவை தொடர நான் அழைப்பது இருவரை 
1 . விக்னேஸ்வரி
2 . விந்தைமனிதன் 

24 comments:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

நல்ல பதில்கள்...

சீமான்கனி சொன்னது…

அருமையான பதில்கள் நேசன் சார் இன்னும் நிறைய பதிவுகள் மூலம் அனைவரின் உள்ளங்களை கொள்ளையடிக்க வாழ்த்துகள்...

இரகுராமன் சொன்னது…

:)

Unknown சொன்னது…

//மண் பயனுற கடுகளவு காரியமேனும் செய்யவேண்டும் இந்த வலைப்பூவைக்கொண்டு.//

சரியான பார்வை, துறை சம்பந்தமான பதிவுகளும் எழுதுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

vinthaimanithan சொன்னது…

நல்ல நேர்மையான, பூச்சுக்களற்ற எளிமையான பதில்கள்...! நெசமாவே ஒரு மலரம்பெய்து உள்ளத்தில் புகுந்துருக்கீங்க!

நான் என்னன்னெல்லாம் சொல்லணும்னு நெனச்சேனோ அதையெல்லாம் நீங்களே சொல்லிட்டு தொடர்பதிவுக்கு வேற கூப்டா எப்டிங்க?

அருண் பிரசாத் சொன்னது…

நல்ல பதில்கள் :)

எம்.ஏ.சுசீலா சொன்னது…

எல்லாம் சரிதான்.
பெண்ணியத்தைப் பழிப்பதுதான் நெருடுகிறது.
சென்ற தலைமுறை கூட இப்படிச் சொல்லலாம்.
இந்தத் தலைமுறைக்காரரான நீங்கள் அப்படிச் சொல்லலாமா.
சரியான நோக்குடன் கூடிய பெண்ணியச் சிந்தனைகள் உங்களை வந்தடையவில்லை போலிருக்கிறது.
அது ஒன்றும்தீட்டுப்பட்ட சொல்லல்ல.
ஏதோ தவறான புரிதலில் இருக்கிறீர்கள்.
காலம் உங்களை மாற்றட்டும்.

Chitra சொன்னது…

very nice. :-)

தூயவனின் அடிமை சொன்னது…

வாழ்த்துக்கள்.

செல்வா சொன்னது…

// தமிளிஷ்(இப்போ இன்ட்லி), //

இவ்ளோ சரியா சொல்றீங்க..? உங்க பொது அறிவுக்கு ஒரு அளவே இல்லாம போய்டுச்சு..

//மண் பயனுற கடுகளவு காரியமேனும் செய்யவேண்டும் இந்த வலைப்பூவைக்கொண்டு. //

நல்ல விஷயம் தான் செய்யுங்க..

//தீராத் தமிழ்க்காதல் என்னை திரும்பவும் எழுத வைக்கிறது.//

நல்லாத்தான் எழுதறீங்க .. எங்க ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு ..

vanathy சொன்னது…

உங்கள் சுயபுராணம் சூப்பரோ சூப்பர்.

Unknown சொன்னது…

சுசீலா அம்மாவிற்கு வணக்கம்,
தவறான புரிதலை ஏற்படுத்தும் விதமாய் எழுதியதற்கு வருந்துகிறேன்.

//தனிமனித தாக்குதல் செய்வோர் மீதும், பெண்ணீயம், பார்ப்பணீயம் இன்னும் பிற ஈயங்கள் காய்ச்சி நம் கண்ணில் ஊற்றுவோர் மீதும்//

பெண்ணியத்தை பழிக்கும் நோக்குடன் நான் அதை எழுதவில்லை.
நான் சொல்ல வந்தது, பெண்ணிய போர்வைக்குள் இருந்துகொண்டு பதிவுலகில் நடக்கும் நாடகங்களை. இவற்றில் பெரும்பாலும் "நீ அடிப்பது போல அடி, நான் அழுவது போல அழுகிறேன்" என்பதாகவே இருக்கிறது.
பொருட்பிழையை சுட்டியமைக்கு என் நன்றிகள். வாக்கியத்தை திருத்துகிறேன்.

Unknown சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
//மண் பயனுற கடுகளவு காரியமேனும் செய்யவேண்டும் இந்த வலைப்பூவைக்கொண்டு.//
சரியான பார்வை, துறை சம்பந்தமான பதிவுகளும் எழுதுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்//

நிச்சயம் எழுதுகிறேன்

Unknown சொன்னது…

வெறும்பய
சீமான்கனி
இரகுராமன்
கே.ஆர்.பி.செந்தில்
விந்தைமனிதன்
அருண் பிரசாத்
எம்.ஏ.சுசீலா அம்மா
Chitra
இளம் தூயவன்
ப.செல்வக்குமார்
vanathy

அனைவருக்கும் என் நன்றிகள்.

கமலேஷ் சொன்னது…

ரொம்ப நல்ல பகிர்வு நண்பரே..

வாழ்த்துக்கள்.

என்னது நானு யாரா? சொன்னது…

வணக்கம் கலாநேசன்!
///நானோ வலைப்பூ துவங்கி விட்டு சுமார் ஆறு மாதம் ஆளில்லாக் கடையில் டீ ஆத்திக்கொண்டிருந்தேன்.///

ரொம்ப காமடியா எழுதியிருக்கீங்க! நல்லா சிரிச்சேன்.

///மண் பயனுற கடுகளவு காரியமேனும் செய்யவேண்டும் இந்த வலைப்பூவைக்கொண்டு.///

அடடா!!! என்ன ஒரு அருமையான சிந்னை.

நான் உங்க 50வது Followerங்க. மறக்காம எல்லோருக்கும் ஸ்வீட் அனுப்புங்க!!!

Thenammai Lakshmanan சொன்னது…

'பிறர்க்கின்னா பின்னூட்டம் செய்யின் - தமக்கின்னா
புனைவாய்த் தானே வரும்'//
இதை ரொம்ப ரசித்தேன் கலாநேசன்..:))

எம் அப்துல் காதர் சொன்னது…

பதில்கள் அருமை பாஸ்

CS. Mohan Kumar சொன்னது…

புன்னகை வர வைக்கும் எளிமையான பதில்கள். அருமை

ஹேமா சொன்னது…

மனதை ஒளிக்காத பதில்கள் !

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தீரா தமிழ் காதல் ... தீராது எம்மீது பதிவுகளாய் பொழியட்டும் ... அன்பின் வாழ்த்துக்களும் வணக்கங்களும் தோழர் ...

ப.கந்தசாமி சொன்னது…

(யாரும் கொலைவெறியோடு அவரைத் தேட வேண்டாமெனக் கேட்டுக்கொல்கிறேன்)

வேற யாரும் வேண்டியதே இல்லை. நீங்களே போதும் அவரைக்கொல்றதுக்கு.

ப.கந்தசாமி சொன்னது…

//நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா ..?//

ஆமாங்க கலாநேசன், தெரியாமத்தான் கேக்கறேன். இந்த தொடர் பதிவுல இந்தக் கேள்விய வச்சுருக்காங்களே, அப்ப இந்தப் பாடாவதிப் பதிவுகளை வச்சு காசு பாக்க முடியுமா? கொஞ்சம் நல்லா விசாரிச்சுப் பாத்து சொல்லுங்க. எனக்கு அவசரமா ஒரு ஆயிரம் ரூபா வேண்டியிருக்குது.

அய்யய்யோ, ஒரு தப்பு நடந்து போச்சுங்க, எனக்கு வேண்டியது ஆயிரம் இல்லீங்க, ஆயிரம் கோடிங்க.

அண்ணாமலை..!! சொன்னது…

///நான் முதுநிலை மருந்தாக்கியல் படித்துவிட்டு தலைநகரில் உள்ள ஒரு மருந்துக் கம்பெனியில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணிபுரிகிறேன்.///

அழகாகத் தமிழில் சொல்லி இருக்கிறீர்கள்!
நன்றிகள்!

Quote

Followers