புதன், 21 ஜூலை, 2010

கூட்டாஞ்சோறு 21.07.2010

பிஞ்சு மனதில் நஞ்சு 
இரண்டு வாரங்களுக்கு முன்பு மதர் தெரசா பள்ளியின் (பிரீத் விகார், கிழக்கு தில்லி) இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயன்றான். அதற்குக் கரணம் கேட்கையில், 'ஆசிரியை B.சுதா என்னை அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் அறைந்து அவமானப்படுத்திவிட்டார்' என்றான். டீச்சர் அடித்ததற்குக் காரணம் அவன் தினமும் வகுப்புக்குத் தாமதமாய் வருவது. தினமும் தாமதமாகக் காரணம் அவன் ஒரு இசைப் போட்டிக்காய் பயிற்சிக்குச் செல்வது. ஆசிரியை அடித்தது தவறு தான் என்றாலும் நாம் யோசிக்க வேண்டியது, சிறு அவமானத்தை/வலியைக் கூட தாங்க முடியாத அளவுக்கு பிள்ளைகளை செல்லமாக வளர்க்கிறோமா? அடி வாங்கியதும் ஓடிப் போய் குதிக்கும் அளவுக்குத் தான் நம் செல்லக் குழந்தைகளின் உள்ளத் திடம் உள்ளதோ? பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்தது யார், நாம் தானோ?

ரூபாய்க்கு குறியீடு 
இதுவரை அமெரிக்க டாலர் ($), ஆங்கிலேய பவுண்ட் (£), ஜப்பானிய யென்(¥) மற்றும்  யூரோ (€) ஆகிய நான்கு காசுகளுக்கு மட்டுமே குறியீடு இருந்தது. இந்திய வருவாய்த் துறை மார்ச் 2009ல்  ரூபாய்க்கான குறியீட்டை உருவாக்கும் போட்டியை நடத்தியது. அதன் முடிவுகள் கடந்த வியாழனன்று வெளியாகியது.



இந்த குறியீடு இனி அனைத்துக் கணிப்பொறிகளிலும், கைப்பேசியிலும், இனி அச்சிடப்படும் ரூபாய் நோட்டுக்களிலும் இடம்பெறும். இந்திய ரூபாய்க்கான இந்த குறியீட்டை வடிவமைத்து வரலாற்றில்  இடம்பிடித்தவர் ஒரு தமிழன். தர்மலிங்கம் உதய குமார். சென்னையைச் சேர்ந்த இவர் மும்பை IITல் முனைவர் பட்டம் முடித்துள்ளார்.

இந்தியில் ர எழுதி நடுவில் ஒரு கோடு போட்டது போலத் தோன்றும் இந்தக் குறியீடு ரோமானிய R  மற்றும் இந்திய தேவாங்கிரியின் கலவை என்று சொல்கிறார்கள். தேசியக் கொடியை மனதில் வைத்து இதை உருவாக்கியதாகச் சொல்கிறார் உதயா. (மேலிரண்டு கோடுகளுக்கும் இரு வண்ணம் இடையே இடைவெளி வெள்ளை). கடந்த வெள்ளியன்றே கவ்ஹாத்தியில் விரிவுரையாளராகச் சேரவேண்டிய இவர் திடீர் புகழ் வெளிச்சத்தால் இன்னும் மும்பையில் இருந்து கிளம்ப முடியவில்லை. வாழ்த்துக்கள் உதயா.

தெய்வக்குழந்தை 
பள்ளி ஆசிரியை ஹேமாவதிக்கும் வருவாய்துறை அதிகாரி கிசோர் குமாருக்கும் ஜூலை எட்டாம் தேதி ஹைதையில் பிறந்த பெண் குழந்தைதான் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் உடல் தானம் செய்தவள். பிறவிக் கோளாறுடன் பிறந்து நான்கு நாளில் மூளைச் சாவடைந்த இக்குழந்தையின் இதய வால்வுகளும், கண்களும் பாதுகாக்கப் பட்டுள்ளன. இதயக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற இயற்கை ரத்தக் குழாய்கள் நிச்சயம் பயனளிக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். நான்கு நாட்களே உயிரோடிருந்த இக்குழந்தை குறைந்தது நாலு பேருக்கு தன் இதய வால்வுகளால் வாழ்வு கொடுக்கிறது. நாம்?

சின்னத்தாய்கள்
இனி திருமணம் ஆகாமல் கருவுறும் பெண்களுக்கும் பள்ளி(?) மற்றும் கல்லூரிகளில் தேவையான அளவு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உச்ச நீத்மன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லி உள்ளது. அப்பெண் திருமணம் ஆனவரா இல்லையா என்று பார்பதைவிட தாயாகப் போகிறவள் என்றே பார்க்கும் இப்புதிய பார்வை சரியே!
ராமநாதபுரத்தில் போன மாதம் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமி ஒருத்தி வகுப்பு இடைவேளையில் கழிவறை சென்று குழந்தை பெற்று அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் வகுப்புக்குள் வந்தமர்ந்தாளாம். அப்பெண் மனது யாருக்கும் சொல்லமுடியாமல் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? அவள் கருவுற்றிருந்தது பள்ளியில் யாருக்கும் தெரியவில்லை, சரி. வீட்டில் உள்ளவகளுக்குக் கூடவா?

தத்துவம் 
உங்களைப் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசாதீர்கள். உயர்வாகப் பேசினால் ஒருத்தனும் நம்ப மாட்டான். தாழ்வாகப் பேசினால் அதைவிட மட்டமாக நினைப்பார்கள்.

9 comments:

vanathy சொன்னது…

very interesting informations! Very sad to hear that 6 year old boy's suicide attempt.

பரிசல்காரன் சொன்னது…

தத்துவம் நச்!

ஜானகிராமன் சொன்னது…

ரூபாய்க்கான குறியீட்டில், தமிழ் ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் காமெடியான ஒன்று. இந்த குறியீட்டை கண்டுபிடித்த தமிழர் உதய்யை பாராட்டலாம் என்றால், அவர் தேவநாகரி மொழி வடிவத்தை மையப்படுத்தி குறியீட்டை எழுதியுள்ளார். அவரை தமிழர் என்று பாராட்டவா அல்லது இந்தித் திணிப்பை ஆதரித்தார் என்று கண்டிக்கவா என குழம்பிப் போயுள்ளனர்.

மஞ்சள்துண்டு எழுதிவரும் கேள்வி-பதில் தந்திரமான பதிலைச்சொல்லும் என்று எதிர்பார்திருக்கிறேன். நமக்கும் பொழுது போகனும்ல..

விக்னேஷ்வரி சொன்னது…

முதல் நிகழ்வு சோகம். இந்தக் காலக் குழந்தைகளுக்கு இவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்ததெனத் தெரியவில்லை. :(

திருமணத்திற்கு முன் குழந்தை பெறும் தைரியமும் எப்படி வந்ததோ... நாம் போகும் பாதை மிகுந்த அபாயங்கள் நிறைந்ததாக உள்ளது.

தத்துவம் நல்லாருக்குங்க.

ஹேமா சொன்னது…

எல்லாமே தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்.கடைசியில் சொன்ன
பொன்மொழியும் வாழ்வியல்.
அருமை கலாநேசன்.

Thenammai Lakshmanan சொன்னது…

தத்துவம் ரொம்ப டச்சிங் மச்சி..:)))

கமலேஷ் சொன்னது…

அருமையான தகவல் தோழரே..

அனைத்தும் நிறைய சிந்திக்க வைத்தது.

வாழ்த்துக்கள் தொடருங்கள்.

Chitra சொன்னது…

உங்களைப் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசாதீர்கள். உயர்வாகப் பேசினால் ஒருத்தனும் நம்ப மாட்டான். தாழ்வாகப் பேசினால் அதைவிட மட்டமாக நினைப்பார்கள்.


...... ஒவ்வொரு செய்தியையும் தெரிந்து எடுத்து பகிர்ந்து இருக்கிறீர்கள். பல விஷயங்கள், எனக்கு புதிது.
இந்த தத்துவம், ரொம்ப சரி. தன்னடக்கம் இந்த ரெண்டுக்கும் நடுவில் மெல்லிய line il இருப்பது. :-)

Chitra சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

Quote

Followers