தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். மஞ்சள் துண்டும் பச்சை இலைகளும் அரசியல் வியாபாரத்தில் சிலபல கட்சிகளை வாங்கி தங்களுக்கு பலம் சேர்த்துக் களம் இறங்குகின்றன. அனுதினமும் புதிய புதிய இலவச அறிவிப்புகள் காற்றில் வந்து நம் நெஞ்சை நனைக்கின்றன. எந்த அரசும் இலவசங்களைத் தரக்கூடாது என்று சட்டம் இயற்ற முடியாதா? பாரதி கேட்ட காணி நிலம் போல, இரண்டு ஏக்கர் நிலம், அப்புறம் ஒரு வீடு, அதில் தொலைகாட்சி, மிக்சி, கிரைண்டர், சாப்பாட்டு அரிசி, சைக்கிள், லேப்டாப், மாடுகள் எல்லாமே இலவசமாகக் கொடுத்தால் ஏழைத் தமிழன் எதைத்தான் உழைத்து சம்பாதிப்பான். நான் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப் போகிறேன் அதில் பத்து ரூபாய் உங்களுக்குப் பிரித்துத் தருகிறேன் "தயவுசெய்து" எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஒப்பந்தம் போடுவதாகவே இலவச அறிவிப்புகள் இருக்கிறது. வழக்கத்திற்கு அதிகமாக பணமும் பரிசுப் பொருட்களும் பிடிபடுகிறது.
தனிமனிதத் தாக்குதல்களுக்கும் குறைவில்லை. தனது வீட்டில் விஜயகாந்தின் ஆட்கள் கல்லெரிந்ததாகவும் அந்தக் கோபத்தில் பேச வந்துள்ளதாகவும் திருவாரூரில் சொன்ன நடிகர் வடிவேல் அவன் இவன் என்ற ஏக வசனத்தில் பேசத்துவங்கினார்.
"நீ முதலமைச்சர்னா நான் பிரதமர். நீ பிரதமர்னா நான் ஜனாதிபதி. நீ கருப்பு எம்.ஜி.ஆர் னா நான் கருப்பு நேரு"
"தண்ணில ஆடற கப்பலை சமாளிக்கறவந்தான் கேப்டன். எப்பவும் தண்ணில ஆடறவன் கேப்டனில்லை"
நிற்க. (அட உங்களைச் சொல்லலைங்க நீங்க உட்காருங்க. நான் என்னைச் சொன்னேன். இது அரசியல் பதிவில்லைங்க அறிவியல் பகிர்வு. ஆனாலும் இந்தத் தலைப்பை வைத்தவுடன் எண்ணியது ஒன்று எழுதுவது ஒன்றாகிப் போனது. சரி விசயத்திற்கு வருவோம்.)
நாம் சற்றும் எதிர்பார்க்காத சில சமையலறைப் பொருட்கள் நமக்கு மருந்தாகக்கூடிய சாத்தியமிருக்கிறது. தமிழ் சினிமா புற்று நோய் வந்தவர்கள் பிழைக்க முடியாது என்ற "விழிப்புணர்வை" ஏற்ப்படுத்திய பின்னரும் காலங்காலமாய் நாம் சமையலறையில் பயன்படுத்தும் மஞ்சள் பொடி கழுத்து, தலை புற்று நோய்களுக்கு மருந்தென்று சொன்னால் நம்புவீர்களா? ஏன்டி ஆக்சிடண்ட்ஸ் (Anti oxidants), ஆஸ்பிரின் நிறைந்துள்ள பச்சைத் தேயிலைச்சாறு சில வகையான புற்று நோயை குணப்படுத்தும் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள் அல்லவா?
பெங்களூருவில் உள்ள மசும்தர் ஷா கான்செர் சென்டர் (MSCC), 220 வாய்ப்புற்று நோய்கொண்ட மனிதர்களுக்கு மஞ்சள் கொடுத்து மருத்துவ ஆராய்ச்சி செய்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் ஒருசில வாரங்களில் வெளியிடப்படும். மஞ்சளும் சில வகையான தேயிலைச் சாறுகளும் புற்று நோய் மருத்துவத்தில் பயன்படுத்துவதை இந்த ஆராய்ச்சி உறுதி செய்யும்.
பெங்களூருவில் உள்ள மசும்தர் ஷா கான்செர் சென்டர் (MSCC), 220 வாய்ப்புற்று நோய்கொண்ட மனிதர்களுக்கு மஞ்சள் கொடுத்து மருத்துவ ஆராய்ச்சி செய்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் ஒருசில வாரங்களில் வெளியிடப்படும். மஞ்சளும் சில வகையான தேயிலைச் சாறுகளும் புற்று நோய் மருத்துவத்தில் பயன்படுத்துவதை இந்த ஆராய்ச்சி உறுதி செய்யும்.
- வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமுமே 85 சதவீத புற்று நோய்களுக்குக் காரணம்.
- 95 சதவீத வாய்ப்புற்று நோய்களுக்கு புகையிலையே காரணம்.
- வாழ்க்கை முறை மாற்றத்தாலும் உணவுக் கட்டுப்பாட்டாலும் பெரும்பாலான மார்பகப் புற்றுநோய்களை தடுக்க முடியும். கொழுப்பு குறைவான உணவுடன் காய்கறியும் பழங்களும் சேர்த்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் வாய்ப்புகள் மிகக் குறைவு.
- புகையும் மதுவும் புற்று நோய்க்கான வெற்றிக் கூட்டணி. புகைப் பழக்கத்தோடு ஒருவர் மதுவும் அருந்தினால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் எட்டு மடங்கு அதிகரிக்கும்.